ஐ.பி.எல். போட்டியில் ஸ்பாட் பிக்சிங் எனப்படும் சூதாட்டம் நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சூதாட்ட புகார்கள் தொடர்பாக 3 வீரர்கள் மற்றும் இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பல்வேறு முறைகேடுகளுக்கு கதவை திறந்து விட்டுள்ள ஐ.பி.எல். போட்டியை தடை செய்ய வேண்டும் என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஸ்பாட் பிக்சிங் மற்றும் பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு விசரணை நடத்த வேண்டும் என்று கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
லக்னோவைச் சேர்ந்த சுதர்ஷ் அவஸ்தி என்பவர் சார்பில் வழக்கறிஞர் விஷ்ணு ஜெயின் இந்த பொதுநல மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "ஐ.பி.எல். போட்டிக்கான ஏலம் தொடங்கியதில் இருந்து தற்போது வரை பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.
கறுப்பு பணம் மற்றும் சமூக விரோதிகளின் பணம் புழங்கியுள்ளதால் இப்போட்டி தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக ஐபிஎல் உரிமையாளர்கள், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்ட சங்கம், மற்றும் மத்திய அரசை பிரதிவாதிகளாக்கி விசாரணை நடத்த வேண்டும்.
மேலும், தற்போதைய ஐ.பி.எல். தொடரில் இறுதிப்போட்டி உள்ளிட்ட 4 போட்டிகளையும் நடத்த தடை விதிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
Post a Comment