ஐ.பி.எல். கிரிக்கெட் ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டம் தொடர்பாக டெல்லி போலீசார் நேற்று மேலும் 3 பேரை கைது செய்தனர். அவர்களில் அஜித் சண்டிலாவுடன் நெருங்கிய தொடர்புள்ள மணிஷ் குதேவாவும் ஒருவர். மணிஷ் குதேவா, 2003-2005ல் ரஞ்சி கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர். நாக்பூரை சேர்ந்த சுனில் பாட்டியா, கிரண்டோலே ஆகிய தரகர்களும் இவர்களுடன் கைதாகினர். அஜித் சண்டிலா ஒரே நேரத்தில் 4 தரகர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக டெல்லி போலீசார் கூறினர்.
சூதாட்ட தரகர்களுடன் ஐ.பி.எல். வீரர்கள் நடத்திய சுமார் 100 மணிநேர செல்போன் உரையாடல்களை இடைமறித்து ஒட்டு கேட்டதன் மூலமாக இவ்விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததாகவும் போலீசார் கூறினர். மேலும், மும்பை, சண்டிகர், கொல்கத்தா, ஐதராபாத் போன்ற நகரங்களில் உள்ள ஓட்டல்களில் ஐ.பி.எல். வீரர்கள் தங்கியிருந்த போது அவர்களை யார் யாரெல்லாம் வந்து சந்தித்தனர்? என்பதை கண்டறிவதற்காக சம்பந்தப்பட்ட ஓட்டல்களின் சி.சி.டி.வி. பதிவுகளையும் டெல்லி போலீசார் ஆய்வு செய்ய உள்ளனர்.
இந்நிலையில், ஐ.பி.எல். சூதாட்டப் புகார் தொடர்பாக ரஞ்சிக் கோப்பை வீரர் பாபுராவ் யாதவை டெல்லி போலீசார் இன்று கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மணிஷ் குதேவாவுக்கு நெருக்கமான பாபுராவ், சூதாட்ட தரகர் சுனில் பாட்டியாவை சண்டிலாவுக்கு அறிமுகம் செய்து வைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே, சென்னையில் சூதாட்டத்தின் முக்கிய புள்ளியாக கருதப்படும் பிரசாந்த் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றதாக கூறப்பட்ட பிரசாந்த், இன்று தனது வழக்கறிஞருடன் வந்து சி.பி.சி.ஐ.டி. போலீசில் சரண் அடைந்தார். டெல்லியில் பதுங்கியுள்ள மற்றொரு முக்கிய புள்ளி அகுஜா குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Post a Comment